Text Widget
Sunday, January 31, 2010
பா.சிவம் கவிதை : ஈழம்
இழந்தவற்றைப் பட்டியலிடும்போது
நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன
மேலும் சில இழப்புகள்…
ஒரு மனைவியை
கணவன் முன் சீரழிக்க…
ஒரு தங்கையை
அண்ணன் முன் தோலுரிக்க
அவர்களால்தான் முடிகிறது…
இழந்தவை என்பது
சில கற்களால் ஆன
வீடுகள் மட்டுமேயென்றால்
மண் துகள்களால் ஆன
நிலங்கள் மட்டுமேயென்றால்
கழற்றி வீசியெறியும்
உடமைகள் மட்டுமேயென்றால்
சொர்ப கனவுகளையும்
அர்ப சடலங்களையும்
குழி தோண்டி
புதைத்து விட்டு
திசை தொலைத்து
காணமல் போயிருக்கலாம்…
இழந்தவை என்பது
இதுதான் என
உணர்த்தவியலாத
உன்னதத்தைக் கடந்த
பல்லாண்டுகால பேருண்மை
எனும்போது…
சொல்லற்று
செயலற்று
நாதியற்று
நடுத்தெருவில்
நாறிக்கொண்டிருக்கிறது
தமிழனின் பிணம்…
அதைவிட மகாகேவலம்
அழிப்பதற்காய் அவதரித்த
சிவன்களும்
அவர்தம் பிள்ளைகள்
விநாயகர்களும் – முருகர்களும்கூட
கண்காணா இடங்களில்
புதைக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்…
சிரித்துக் கொண்டே
நிறுவப்படுகிறார்
இன்னொரு கடவுள்…
மனிதர்களைக் காப்பாற்ற
இயலாக் கடவுள்கள்
அழிக்கப்படும்போது
மனிதர்களால்
வேடிக்கை பார்க்க
மட்டுமே முடிகிறது…
கிரிங்கா என
கிளிநொச்சியும்
முல்லதூவ என
முல்லைத்தீவும்
கற்பழித்து கொல்லப்பட்ட பின்னரும்…
வாழ்க்கை
எதோவொரு திசையில்
நொண்டி நொண்டி
நகர்ந்துக்கொண்டுதானிருக்கிறது…
இனி இழப்பதற்கென்று
புதிதாக ஏதுமில்லை
மிச்சமீதி கடவுள்களைத்
தவிர…
* * * *
No Response to "பா.சிவம் கவிதை : ஈழம்"
Leave A Reply