Text Widget

Tuesday, February 2, 2010

சிறுகதை: ஏந்தல்

Posted on 12:41 AM by கே.பாலமுருகன்

இன்னும் விடியாத பொழுது. மஞ்சளொலி வீச்சுள்ள சுரங்கப் பாதையில் இறங்கி நடக்கும்போது, மலாய் ஆடவர்கள் பலவிதமான குல்லாக்களிலும் தங்களுக்கேயுரிய இஸ்லாமிய கலாச்சார புத்தாடைகளோடும் சுகந்த வாசத்தோடும் மலர்ந்த முகத்தோடும் சென்றதைக் கண்டேன்.

மஸ்ஜிட் நெகாராவின் முதன்மையான இரும்பு பெருங்கதவு திறக்கப்பட்டிருந்தது. நுழைகையில் வலது பக்கமாய் பாதிவரை எழுப்பப்பட்ட குறுகியச்சுவர் இருந்தது. சுவரோரத்தில் உட்கார்ந்து கொண்டேன். கழுவாத முகம். கலைந்த கேசம். வியர்வை நாற்ற உடை. என்மேல் நானே நுகரும் துர்வாடை. சிறு துண்டை எடுத்து தலையில் கட்டினேன். அதுவும் குமட்டும் ஒரு வாடையைத் தந்தது.

சிலர் வாசலுக்கு வெளியே தங்கள் வாகனங்களிலிருந்து தரை விரிப்புகளைக் கொண்டு வந்து விரித்துக் கொண்டிருந்தனர். சிலர் மடக்கப்பட்ட மேசைகளைத் தூக்கி வந்து வைத்தனர். கொஞ்ச நேரத்திற்குள் அவ்வெளிப் பகுதி பரபரப்பு சூழ்ந்து கொண்டது. பலகாரப் பாத்திரங்களையும் உணவு வகைப் பாத்திரங்களையும் அடுக்கும் அவசரம், வரிசைப்படுத்தும் லாவகம் அவர்களிடையே தென்பட்டது.

இலேசாய் விடியத் தொடங்கியது.

உட்புகும் ஒவ்வோரிடமும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் முக மலர்ச்சியோடும் பல்லிளித்தவாறும் “ செலாமாட் ஹரிராயா !” என்று சொல்லியவாறே வலதுக்கையை உயர்த்திக் கொண்டும் அருகில் சென்று கைக்கொடுத்துக் கொண்டும் இருந்தனர்.

நீண்ட அங்கியோடும் முக்காடும் கையுறைகளையும் அணிந்திருந்த ஒரு மாது என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.

அவள் ஓர் உணவுப் பொட்டலத்தையும் காகிதக் குவளையில் சுடச்சுட தேநீரையும் தந்து “ செலாமாட் ஹரிராயா பாக் ...” எனச் சொல்லி மடிக்கப்பட்ட வெள்ளியை என் சட்டைப்பையில் திணித்தாள்.

கொடுக்கப்பட்டதைத் தின்று முடித்து, குடித்து, அந்தக் குவளையைத் தரையில் ஒரு தட்டுத் தட்டி, சட்டையில் துடைத்து எனக்கு முன்னாக வைத்தேன்.

விடிந்தது.

உள்நுழைந்த சிலர் என் வலது புறத்திலும் இடது புறத்திலுமாய் உட்கார்ந்துகொண்டு தங்கள் பிச்சைப் பாத்திரங்களைத் தங்கள் பையிலிருந்து எடுத்து வைத்தனர். இவர்களில் அநேகர் கைலிகளை அணிந்திருந்தனர். என் வலது புறத்திலும் இடது புறத்திலும் இருந்தவர்கள் தங்கள் முகத்தை சுளித்துக்கொண்டும் முனகிக் கொண்டும் எதிர்வரிசையில் தூரமாய் போய் உட்கார்ந்துக் கொண்டனர்.

சூரியனின் நேரடி ஒளிவீச்சு கண்களைக் கூசச் செய்தது. என் வரிசையில் இருந்தவர்கள் அத்துணைப் பேர்களும் எழுந்து வேறு இடம் தேடிச் சென்றனர். முகத்தை நிமி÷த்த முடியாதபடிக்கு ஒளிவீச்சு கடுமையாய் இருந்தது.

வண்ண வண்ண உடைகளில் கும்பல் கும்பலாக, கூட்டங் கூட்டமாக, ஜோடி ஜோடியாக பள்ளிவாசற்படிகளில் ஏறும் மனிதர்களிடையே குதூகலம் காணப்பட்டது.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஒலிபெருக்கிகள் பேரொலி எழுப்பின. பிச்சைப் பாத்திரங்களை வைத்திருந்தவர்களிடையே பரப்பரப்பு உண்டானது. எழுந்து படிகளண்டைக்குச் சென்று அங்குமிங்குமாய் நிற்கத் தலைப்பட்டனர். அங்கவீனர்களுக்கு உதவும்படியாக அவர்களின் அன்புக்குரியவர்களும் நம்பிக்கைக்கு உரியவர்களும் அவர்களோடிருந்தனர். சூமீபிய அவயங்களுடைய ஒருவன் தரையில் குப்புறப்படுத்தபடி பள்ளிவாசலின் படிகளையே கண்ணோக்கிக் கொண்டிருந்தான். மொட்டைத் தலையுடனிருந்த பருத்த தேகமுடையவன் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டிருந்தான். அவன் கழுத்தில் நான்கைந்து ஜெப மாலைகள். அவனின் ஒரு கை, மாவுக்கட்டுடன் கழுத்துக் கயிறால் தாங்கிய வண்ணம் இருந்தது. ஒரு பெண்ணைப் போல சைகைகளைச் செய்து கொண்டிருந்த ஒருவன், மட்டைப்புயலையில் புகைவிட்டுக் கொண்டிருந்தான்.

என் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வை துளிகள் கண்ணோரங்களிலும் மூக்கின் நுனியிலும் வந்து தரையில் விழுந்தன. தொழுகை முடிந்து வெளிப்படத் தொடங்கினர். நீண்ட பளிங்குக் கல் படிகளில் நிரம்பியது ஜனத்திரள். எங்கும் “ செலாமாட் ஹரி ராயா !” என்ற ஆனந்த சத்தம். ஆனந்த நகர்வு.


சில்லரைகளின் பிச்சைப் பாத்திரங்கள் சப்தம் எழுப்பின. கடைசிப் படிக்கட்டிற்கு வந்தடைந்தவர்களிடம் பிச்சைப் பாத்திரங்கள் ஏந்தப்பட்டன. அநேகமாக பெரும்பாலும் கேஎப்•ஸி குவளைகளும் மெக்டோனல் குவளைகளும்தான் பாத்திரங்களாய் இருந்தன. சிலர் மாத்திரமே அலுமினியப் பாத்திரங்கள் வைத்திருந்தனர். கீழிறங்கி வருவோரிடம் சிலர் வலிந்து பிச்சைக் கேட்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு சிலரே பிச்சைப் பாத்திரங்களைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்தனர்.


எங்கும் நகரும் சூழல். ஒருவன் “ நோர்குமலாஸாரி... நோர்குமலாஸாரி... ” என்று கத்திக் கொண்டே உயர்ரக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணை நோக்கி வேகமாக நகர்ந்து தன் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தினான். அதிர்ச்சியடைந்த விதமாய் தன்கையை நெஞ்சில் வைத்து, பிறகு தன் விலையுயர்ந்த பணப்பையைத் திறந்து, அவனுக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி சூழ்ந்திருந்த பாத்திரங்களில் நோட்டுகளை இட்டாள். அவள் போட்டு முடிப்பதற்குள் இன்னொரு குரல் ஒலித்தது. “டத்தோ கமாரூடின்... டத்தோ கமாரூடின் ... ” பாத்திரங்களின் ஏந்தல் அப்படியே திசை மாறியது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் சிவப்பு நோட்டு கிடைத்தது. பிச்சைப் போடப்பட்டதும் கூட்டம் சுறுசுறுப்படைந்து தங்களுக்கு அறிமுகமான முகங்களைத் தேடின. சிலர் கூச்சல் போடாமல் அவர்களுக்கு மட்டும் தெரிந்த செல்வந்தர்களிடம் போய் சலாம் சொல்லி வாங்கிக் கொள்வதைப் பார்த்தேன். ஏனோ எழுந்திருக்க மனமில்லை எனக்கு. இந்தச் சூழலில் இந்த இடத்தில் எனக்குப் பணம் குறிக்கோள் இல்லை ; ஆயினும் என் பிச்சைப் பாத்திரத்தில் பணம் போடப்பட போடப்பட எடுத்து என் சட்டைப்பையில் திணித்துக் கொண்டேன். மடிக்கப்பட்ட, கசக்கப்பட்ட நோட்டுகளால் என் சட்டைப்பையும் நிரம்பியது. என் கழுத்தோடு சுற்றி பின் பக்கம் வத்திருந்த துணிப்பையைத் திறந்து எல்லா நோட்டுகளையும் சில்லரைகளையும் போட்டு மூடினேன். சிறு பிள்ளைகள் தாய்தகப்பன் துணையோடு பிச்சைப் பாத்திரங்களில் சில்லரைகளையும் வெள்ளிகளையும் போட்டுக் கொண்டே ‘ சலாம் ’ சொல்லிப் போனார்கள். மகிழ்ச்சியின் ஆரவாரம் அவர்களின் நடையிலும் பாவணையிலும் இருந்தது.


உட்கார்ந்தவாறே பிச்சைப் பாத்திரங்களை ஏந்தியபடியிருந்தவர்களைச் சிலர் அசட்டைப் பண்ணினர். சிலர் நின்று, தங்கள் பையிலிருந்து எடுத்து, போட்டுச் சென்றனர். நான் பாத்திரத்தை ஏந்தாதபடி தலைக்கவிழ்த்தே கிடந்தேன். போடும் விரல்களை மட்டும் பார்த்தபடி இருந்தேன். நன்றி சொல்வதற்குக் கூட விரும்பவில்லை. நா ஒட்டிக் கொண்டது போலவும் இருந்தது. விரும்பும் போது மாத்திரம் தலையை நிமிர்த்தி காட்சிகளைக் கண்டேன்.

வாசலை ஒட்டி வெண்தலைப்பாகை கட்டிய, வெண்ணங்கித் தரித்த, நீண்ட தாடியுடைய ஒருவர் தரைவிரிப்பில் கிடந்த தன் பொருட்களை எடுத்து தடித்த தன் பெருங்குரலோடு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சிலர் அவரைச் சுற்றி வட்டமிட்டு நின்ற வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர், தொழுகை நேரத்திற்கு முன்பு பள்ளிவாசலுக்குள் போகாதது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. சக வியாபாரிகள் போலவே அவரும் இருந்தார். ஒரு வேளை, வியாபாரத்தைக் கவனிக்க வேண்டி அதிகாலமே தன் தொழுகையைத் தனியாக முடித்திருக்கக் கூடும்.


சூரியன் உச்சிக்கு வரும்போது மனித இரைச்சலும் ஆரவாரமும் இல்லாதிருந்தது. பிச்சை ஏந்திய கூட்டம் தங்கள் பாத்திரங்களைச் சிலர் குப்பைத்தொட்டியில் போட்டனர். சிலர் தங்கள் பைகளில் பத்திரப்படுத்தினர். சிலர்,“ இடுகாட்டிற்குப் போவோம் வாருங்கள் ” என்று மலாய் மொழியில் கூவி அழைத்துச் செல்வதைக் கண்டேன். சிலர், யாரும் பார்த்துவிடாதபடிக்கு மறைமுகமாக தங்கள் பையிலிருந்த வசூலை எண்ணிப் பார்த்து, ஆனந்தித்துச் சென்றனர்.


வியாபாரிகள் பலரும் போய்விட்டிருந்தனர். வானத்தின் மேகங்கள் கருமையடைந்திருந்தன. மழை பெய்வதுபோல தெரிந்ததால் எழுந்து சுரங்கத்தின் வழியாக நடந்தேன். எங்கும் உணவுப் பொட்டலங்களும் காகிதக் குவலைகளும் சிதறிக் கிடந்தன. சிறிய உணவுகளை மிதித்துவிடாதபடிக்குப் பார்த்து நடந்தேன்.

டயாபூமியின் கீழ்த்தள வட்ட பளிங்கு கல்லிருக்கையில் என் போன்றோர் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். சிலர் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர். எவரும் தங்களின் உண்மையான வசூலைத் தவறியும் சொல்லாதிருந்தனர். “ அல்ஹம்டுல்லில்லாஹ் . . .” என்றும் “ ரெசெக்கி . . . பெர்ஷீக்கோர்வா அல்லாஹ் யாங் மாஹா பெஞ்ஞாயாங் . . .” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். கைக்கு மாவுக்கட்டு போட்டிருந்தவன் அதனைப் பிரித்துக் கொண்டிருந்தான். அது மாவுக்கட்டுதான் என்று நினைத்திருந்தேன். அவை வெறும் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வெறும் துணிகளே என்றறிந்ததும் சிரிப்பு வந்தது எனக்கு.


மழையில் நனைய வேண்டும்போலிருந்ததால் வெளியேறினேன்.


ஆற்றுப் பாலத்தின் கீழ், மறைவின் ஓர் ஓரத்தில், பிச்சைப் பெற்ற சிலர் போதை மருந்தை வாங்கி ‘ ஜேப்’ பண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்களும் “பெர்ஷீகோர்லா துஹான் !” என்று சொல்வார்களோ, தெரியவில்லை.

சட்டென மழை நின்று வெயிலடிக்க ஆரம்பித்தது. சீனச் சந்தை தெருவைக் கடக்கும்போது ஒரு பட்ஜெட் விடுதியினருகே நின்ற காரிலிருந்து இரண்டு பேர் பின்பக்க வாகனக்கதவைத் திறந்து, ஒருவனைத் தூக்கிக் கொண்டு விடுதிக்குள் நுழைவதைக் கவனித்தேன். பள்ளிவாசலின் படிகளுக்கு நேராக தரையில் குப்புற படுத்தப்படி பிச்சை வாங்கியவன் அவன். அதிக பணம் கிடைத்திருக்கும். பஞ்சு மெத்தையில் மல்லாக்க படுத்தப்படி “யா அல்லாஹ் ...” என்பானோ, தெரியவில்லை.

தொடர்ந்து நடந்தபோது சீனத்து பழங்கோயில் தென்பட்டது. ‘ டத்தோ காமாரூடின் ’ என்று கத்திக் கூச்சலிட்ட உயரமான மலாய் பெண் அந்தக் கோயில் வாசல் இடது பக்கத்தில் குந்தியப்படி கையை ஏந்தி கொண்டிருந்தனர். வலது பக்கமெல்லாம் வயோதிகச் சீன ஆண்களும் பெண்களுமாய் குந்திய வண்ணம் பாத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தனர். யாரும் அவளை ஒரு வார்த்தையும் கேட்கவும் இல்லை, ஏசவும் இல்லை. ஏனெனில், இந்தச் சீன வயோதிகர்களும் மஸ்ஜிட்டில் பிச்சை எடுத்தவர்கள்தான். தங்களின் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்காக பிச்சை ஏந்தும் மனிதர்களுக்கு மதம் ஒரு முக்கியமல்லாத ஒன்றுபோல. அல்லது, பணம் எங்கிருந்து சுலபமாக கொட்டுகிறதோ அங்குச் சென்று பெற்றுக்கொள்ள மதமோ அதன் வரையறைகளோ நியாயப்பிரமாணங்களோ இவர்களுக்குத் தடையாக இருத்திக் கொள்ள விரும்புவதேயில்லை. பிச்சைப் போடுபவன் விருத்தசேதனம் பண்ணப்பட்டவனா - பண்ணப்படாதவனா என்று பார்த்தா போடுகிறான்? இல்லை. இவர்கள் வறுமையின் விளிம்பில் இருப்பவர்கள் என்றுதானே நினைத்துப் போடுகிறான். அவள் யாரிடமோ “ இன்ஷா அல்லாஹ் . . .” என்று சொல்வதைச் செவி கேட்டது. சிரித்தப்படி கடந்து போனேன்.

நடந்து கொண்டே முதுகில் கிடந்த பையைத் திருப்பி, திறந்து பார்த்தேன். பணம் அதிகமாய்தானிருந்தன. ஒரு ஜோடி உடைகள் வாங்கிய பிறகு விடுதியில் அறை ஒன்றை எடுத்தேன். வெந்நீர் குளியல் சுகம் தந்தது. பையைத் திறந்து கட்டிலின்மேல் கொட்டினேன். சில்லறைகளும் வெள்ளித் தாட்களும் சிதறின. சில்லறைகளைத் தனியாகச் சேர்த்துவிட்டு 1-2-5-10-50 நோட்டுகளைத் தனித்தனியாகப் பிரித்து வைத்து எண்ணினேன். மலைப்புத் தந்தது. பிச்சை எடுக்க அநேகமானவர்கள் ஏன் போகிறார்கள் என புரிய வந்தது. இங்கே மதத்திற்கு மதம் ஈகை செய்வதில் போட்டாப் போட்டி இருக்கும்வரை, பிச்சைப் பாத்திரங்கள் இருக்கும் என்று தோன்றியது.

முகச் சவரமும் தலை முடி வெட்டியப் பின்பு தலை முடியை வெட்டி முகச் சவரம் செய்து கொண்டேன். இந்திய சிகை திருத்துநர் நெற்றியைத் தட்டி, பிடரியைத் தட்டி, முதுகையும் தட்டி விட்டார். புத்துணர்ச்சியோடு விடுதியை நோக்கி நடந்து கொண்டிருக்கும்போது, “ அண்ணே... அண்ணே ... ” என்றழைக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினேன். ஒரு மாது தன் குழந்தையை ஏந்தியபடி அருகில் வந்து கையேந்தினாள். அவள் என்னை விட உயரம் கம்மி. கைலியணிந்திருந்தாள். குழந்தை ஐந்து மாதமோ ஆறு மாதமோ இருக்கும். “ அண்ணே ... ஒதவி செய்ங்கண்ணே. பச்சைப் புள்ளைக்கு மாவு வாங்கக் கூட காசில்லேண்னே... ” என்று சொல்லியவாறே கண்ணீர் விட்டாள். ஒட்டிய கன்னங்களும் ஏந்தலின் ஏக்கப் பார்வையும் அவளின்பால் பரிவுக் கொள்ளச் செய்தது.

“உன்னோட புருஷன் எங்கே ? ” என்றேன்.
“ அந்தாளு ஜெயிலுக்குப் போயுட்டாருண்னே ...”
“ மாமியாரு வீடு ... ”
“ வீட்டுக்குத் தெரியாம கோயில்ல வைச்சு தாலி கட்னாருண்னே. அவரு கூட தனியாத்தான் இருந்தேன். இப்ப எங்க வீட்லயும் சேக்க மாட்றாங்க. அவுங்க வீட்லயும் சேக்க மாட்றாங்கண்னே ...”

ஐயோ பாவம் ! பரிதாபம் என்று மனம் எண்ணியது. “ சரி. இப்ப பணம் இல்ல என்கிட்ட. நா தங்கியிருக்கிற ஹோட்டலுக்கு வா. உனக்கு வேண்டியதைத் தரேன். ” என்றதற்கு புருவத்தைச் சுருக்கி யோசிக்க ஆரம்பித்தாள். வார்த்தை ஒன்றும் வராதபடியினால், “ சரி . நீ இங்கேயே இரு. ஒரு முப்பது நிமிஷத்துல வந்து கொடுக்கிறேன். ” என்று சொல்லி நடந்தேன். என்ன நினைத்தாளோ பின் தொடர்ந்து வந்தால். தாயின் அணைப்பில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

விடுதியின் வரவேற்பறையில் “ இங்கே நீ உட்காரலாம் ... ” என்று சொல்லி முடிப்பதற்குள்ளே “ இல்லண்னே! கூடவே வரேனே... ” என்றாள். அறையைத் திறந்து அவளை அமர வைத்தேன். என் பையில் நான் ரப்பரால் கட்டி வைத்த ஐம்பது வெள்ளி கட்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் கண்களை மலர்ந்து ஆச்சரியப்பட்டாள். “ இவ்ளோ பணமா . .? ” என்று கையில் வாங்கியபடியே கேட்டாள். “ எனக்குக் கொடுக்கப்பட்டதை நான் திரும்பக் கொடுக்கிறேன். என்னிடமிருந்து பறிக்கப்படுவதற்கு முன் கொடுக்க வேண்டியவர்களுக்கு நான் கொடுக்கிறேன். அவ்வளவுதான் ” என்றேன். அறையின் குளுமையினூடே அவளின் விரல்கள் மெல்லிய கதியில் நடுங்கின. அவள் அந்தப் பணக்கட்டினையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிரக்ஞையற்ற நொடியில் தலை கவிழ்த்திருந்தவள் சடாரென எழுந்து என் காலில் விழ எத்தனித்தாள். “ ஐயோ ! ” என்றவாறே நான் விலகி நின்றேன். “ நானுன்னை ஆசிர்வதிக்க தகுதியில்லாதவன். போ ! இனி கையேந்தாதே . . எத்தனையோ ஆசிரமங்கள் உண்டு. நல்ல ஆசிரமமாகப் பார்த்து இரு. உனக்கும் பாதுகாப்பு, உன் பிள்ளைக்கும் பாதுகாப்பு .. ” என்றேன். பிள்ளையோடு எழுந்து கையெடுத்துக் கும்பிட்டாள். நானும் அப்படியே செய்தேன். குழந்தை சிணுங்கத் தொடங்கியது.

கதவைத் திறந்து வைத்தேன். “ இனி நான் கையேந்தினால் செருப்பால் அடிங்கண்னே . . ” என்று கொஞ்சமாய் ஆவேசப்பட்டுச் சொல்லி நகர்ந்தாள். கதவை மூடினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. திறந்தேன் அவள். “மன்னிக்கனும்னே . ஒங்க பேரு . .” என்று தயங்கியவாறு கேட்டாள். “அது முக்கியமல்லம்மா. நா மகாத்மா கிடையாது. . ” என்றவுடன் திரும்பிச் சென்றாள்.

சரியாக ஒரு வருடம் கழித்து, மாரியம்மன் கல்யாண மண்டப வரிசையில் உள்ள ஓர் இந்திய உணவுக்கடையில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது, மேசைக்கு மேசை சென்று பிச்சைக்காக கையேந்தி கொண்டிருந்தாள் தன் பிள்ளையோடு ஒரு தாய். எங்கேயோ பார்த்ததுபோல நினைவுத்தட்டியது.

என் மேசைக்கு வந்தபோது அவளை உற்றுக் கவனித்தேன். என்னைக் கண்டதும் ஒரு பேயைக் கண்டதுபோல திரும்பி ஓட்டமெடுத்தாள். எல்லோரும் அவளைப் பார்த்த பிறகு என்னைப் பார்த்தார்கள். நான் உணவருந்துவதில் முழு கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.


* * * * * *



































No Response to "சிறுகதை: ஏந்தல்"

Leave A Reply